மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 5 பேர் கைது pt desk
குற்றம்

வாணியம்பாடி | வெளிச்சந்தையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 5 பேர் கைது

வாணியம்பாடியில் அரசு மதுபான கடையில் மதுபானங்களை வாங்கி அதை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த 5 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 1000 மதுபான பாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் அரசு மதுபான கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி அதை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க தனிப்படை காவலர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், புதுமனை நடுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த லெனின் (எ) இளந்தென்றல், கிருஷ்ணன் வட்டம் பெத்தகல்லுப்பள்ளியைச் சேர்ந்த பாபு, தெக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்த அரவிந்த், மேட்டுபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 1000 மதுபான பாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து, 5 பேரையும் அம்பலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர், அதனை தொடர்ந்து 5 பேர் மீது அம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.