குற்றம்

கோவை: கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 6 பேரை காணொளி மூலம் ஆஜர்படுத்த முடிவு!

webteam

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரை இன்று கானொளி காட்சி மூலம் ஆஜர் படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த மாதம் அதிகாலையில் கார் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஜமேஷா முபின் (28) என்ற பொறியியல் பட்டதாரி பலியானார். இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தொடங்கியது. விசாரணையில் ஜமேஷா வீட்டிலிருந்து 75 கிலோ வெடி மருந்து மற்றும் ஐ.எஸ். இயக்கம் தொடர்பான குறிப்புகள் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாரூதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேரை தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்தனர். 6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 8ம் தேதி ஆஜர்படுத்தினர். 6 பேரையும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு சம்பந்தமாக 6 பேரையும் ஆஜர்படுத்த வேண்டிய நிலையில், பாதுகாப்பு கருதி ஆறு பேரையும் அழைத்து வருவதில் நேரம் அதிகம் எடுப்பதாகவும், கோவை சிறையில் இருந்து விடியோ கான்பரன்ஸ் மூலம் 6 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்போவதாகவும் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆறு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, நேரில் அழைத்து வர என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்து இருப்பது தகவல்கள் வெளியாகி உள்ளது.