குற்றம்

கடைசி நேரத்தில் காதலனுடன் சென்ற மணமகள்.. சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த தாய்மாமன்..!

webteam

திருச்சியை சேர்ந்த 13 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து கொண்ட அவரது தாய்மாமன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சிறுமி, 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய்மாமன் அருள்பாண்டி. இவர் தேனி மாவட்டம் தென்றல் நகரில் வசித்து வந்தார். அவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் காதல் இருந்ததால் அவர் தனது காதலருடன் சென்று விட்டார்.

உடனே அருள்பாண்டி தனது உடன்பிறந்த சகோதரி மகேஷ்வரியை தொடர்புக்கொண்டு திருமணம் தடைப்பட்ட விபரத்தை சொல்லியிருக்கிறார். பின்னர், மகேஷ்வரி தனது மகளை அருள்பாண்டிக்கு திருமணம் செய்துக்கொடுக்க முடிவெடுத்தார். இதனைத்தொடர்ந்து திருச்சியில் இருந்த பிருந்தாவை கட்டாயப்படுத்தி தேனிக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அருள்பாண்டி சிறுமியை சட்டவிரோதமாக கட்டாய திருமணம் செய்துக்கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, அரசு கொடுத்துள்ள 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புக்கொண்டு புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.