குற்றம்

சென்னை: பெண் மாணவ நிருபருக்கு பாலியல் தொல்லை – உபர் ஆட்டோ ஓட்டுநர் கைது

webteam

சென்னையில் தனியார் கல்லூரி பெண் மாணவ நிருபருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை செம்மஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வரும் பெண் மாணவ நிருபர், உபர் ஆட்டோவில் சென்றபோது ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், தோழியுடன் நேற்றிரவு உபர் ஆட்டோவில் வந்தபோது ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் விசாரிக்க பெண் போலீஸ் இல்லாமல் தான் தங்கி இருக்கும் ஹோட்டலில் வந்து காவலர் ஒருவர் விசாரித்துச் சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்க விடாமல் தொடர்ந்து தடுக்கும் வகையிலேயே காவலர்கள் பேசியதாகவும் கூறினார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் புகைப்படம் மற்றும் உபர் ஆட்டோவில் பயணித்த தகவல் குறித்தும் போட்டோ ஆதாரங்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாலியல் தொந்தரவு செய்த ஆட்டோ ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் மாணவ நிருபர் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் ஆட்டோ ஓட்டுநர் செல்வம் என்பவரை கைது செய்தனர்.