குற்றம்

தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக இரு இளைஞர்கள் கைது – 3 சவரன் நகை பறிமுதல்

webteam

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த மதுராந்தகம் பகுதி சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருவர் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த சரண் மற்றும் அசோக் குமார் ஆகியோர் மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் தனியாக செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த சித்தாமூர் போலீசார், அவர்களிடம் இருந்து மூன்று சவரன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.