குற்றம்

சென்னையில் ஒரே நாளில் நான்கு பெண்கள் மாயம்

சென்னையில் ஒரே நாளில் நான்கு பெண்கள் மாயம்

webteam

சென்னை குரோம்பேட்டையில் அடுத்தடுத்து நான்கு பெண்கள் காணாமல் போனதாக சிட்லபாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டை ஏழுமலை நகரில் வசித்து வருபவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 62).இவருடைய பேத்தி வினோதினி. கல்லூரி மாணவியான இவர் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக அந்தப்பெண்ணின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். அவர்களுக்கு விவரம் தெரியாததால் இது தொடர்பாக சிட்லபாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல்  சிட்லபாக்கம் பாலமுருகன் நகரில் வசித்து வரும் சரவணன் என்பவர் தனது மனைவியை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். பாலமுருகனின் மனைவி நீலா தேவி (25) நேற்றிரவு கடைக்கு செல்வதாகக் கூறி சென்றுள்ளார். அதன் பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. மனைவி மாயமானதை தொடர்ந்து சிட்லபாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தை அடுத்த சேலையூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சண்முகம் (76) ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது பேத்தி 11ம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் தனது தோழியுடன் விளையாட சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது தோழியிடம் விசாரிக்க சென்றுள்ளார்.  ஆனால் அங்கு அந்தப்பெண்ணும் இல்லை.இதனையடுத்து இருவரும் மாயமானது தெரியவந்துள்ளது.பள்ளி மாணவிகள் மாயமானது தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.