குற்றம்

ராஜபாளையம்: பெண் காவலரின் பைக்கை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்

JustinDurai
ராஜபாளையத்தில் வீட்டின் முன்பாக நிறுத்தப் பட்டிருந்த பெண் காவலர் உள்ளிட்ட இருவரது இரண்டு சக்கர வாகனங்களை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியின் 29 வது வார்டை சேர்ந்த சிவகாமிபுரம் தெருவில் வசிப்பவர் முத்துக்குமார் மனைவி சாந்தி. சாந்தி 11 அணி சிறப்பு காவல் படையில் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் வீடு சந்துக்குள் இருப்பதால், தெரு புறமாக உள்ள தனது கணவரின் பாட்டி வீடு முன்பாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்துவது வழக்கம். மேலும் தனியார் கல்லூரியில் விரிவுரையாளரான முத்துக்குமாரின் சகோதரர் கணேச பெருமாள் வீடும் சந்துக்குள் இருப்பதால், தனது இரு சக்கர வாகனத்தை சாந்தி வாகனம் அருகே நிறுத்தி இருந்தார்.


இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு தெருவில் அதிக வெளிச்சம் தெரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், வெளியே வந்து பார்த்த போது இரண்டு வாகனங்களும் எரிந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்து வந்த வாகன உரிமையாளர்கள், அருகிலிருப்பவர்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். அதற்குள் இரண்டு வாகனங்களும் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில், தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் வீட்டின் முன் நிறுத்தப் பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப் பட்ட சம்பவம் அப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.