குற்றம்

மனைவி மற்றும் குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது

kaleelrahman

ஓமலூர் அருகே இரண்டு குழந்தைகளுடன் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவரையும் கள்ளக் காதலியையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள கணவாய்புதூர் கே.மோரூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு மரகதம் என்ற மனைவியும் செல்வகணபதி, கோகுலகண்ணன் ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், தனது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீதா என்ற பெண்ணுடன் பிரபாகரனுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த மரகதம், பிரபாகரனிடம் கள்ளத் தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார்.

இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், பிரபாகரன் கள்ளத் தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மனமுடைந்து காணப்பட்ட மரகதம், கடந்த பிப்ரவரி மாதம் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மனைவி மற்றும் குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. பின்னர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபாகரனையும், அவரது கள்ளக்காதலி சீதா ஆகியோரை நேற்றிரவு கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிரபாகரனை ஆத்தூர் கிளை சிறையிலும், சீதாவை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.