குற்றம்

பெயிண்டராக நடித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 7 கிலோ கஞ்சா பறிமுதல்

webteam

மாங்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மாங்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி, சப் இன்ஸ்பெக்டர் பொற்பாதம் ஆகியோர் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மாங்காடு அடுத்த கோவூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த இரண்டு பேரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், குன்றத்தூர் அடுத்த நந்தம்பாகத்தைச் சேர்ந்த ஜனார்த்தனம் (36), கோவூரைச் சேர்ந்த விஜயகுமார் (42), என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் பகல் நேரங்களில் பெயிண்டராக வேலை செய்து வந்ததோடு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கிவந்து இங்கு சில்லறை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.