மதுரை விமான நிலையத்தில் இருந்து இந்திய ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள 40,000 அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
இன்று (26.11.2021) காலை 09.30 மணியளவில் இலங்கையிலிருந்து 126 பயணிகள் விமானத்தின்மூலம் மதுரை வந்தடைந்தனர். அதே விமானத்தில் இலங்கை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த 111 விமானப் பயணிகளிடம் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த 2 நபர்களை அழைத்து விசாரித்ததில், இலங்கைக்கு சுற்றிப்பார்க்க செல்வதாகக் கூறியுள்ளனர். பிடிபட்ட இருவரும் ஒரே மாதிரியான காலணியை அணிந்திருந்தது சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சந்தேகமடைந்த சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பரிசோதனை செய்ததில் 10,000 அமெரிக்க டாலர்கள் வீதம் நான்கு காலணியில் சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களை மறைத்து கொண்டுசெல்ல இருந்தது தெரியவந்தது. கடத்த முயன்ற அமெரிக்க டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.30 லட்சம் எனவும் தெரியவந்துள்ளது.
அமெரிக்க டாலர்களை கடத்த முயன்ற இருவர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த சிரஜுள் நாதிர் என்பவரது மகன் மொகமத் அஜ்மீன். மற்றொருவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெய்னுலாப்தீன் என்பவரது மகன் சிக்கந்தர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரையும் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் மேலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.