குற்றம்

காஞ்சிபுரம்: கார் சீட்டின் அடியில் வைத்து 22 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது

நிவேதா ஜெகராஜா

காரில் சீட்டின் கீழே மறைத்து வைத்து கடத்த முயன்ற 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது தமிழ்நாடு மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ். இவ்வழக்கில் 2 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி சசந்திப்பு வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மாநில போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அத்தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த டாட்டா இண்டிகா கார் ஒன்றை சோதனை செய்த போது காரின் பின்பக்க சீட்டின் கீழ் மறைத்து வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரில் கஞ்சாவை கடத்தி வந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மகேஷ்வரன் என்ற பரோட்டா மகேஷ் மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.

இவர்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கார் மூலமாக காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்து விற்பனையில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது. ஏற்கெனவே மகேஷ்வரன் மீது தேனி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நிலுவையில் உள்ள போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கஞ்சா விற்பனை செய்யும் முக்கிய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் 10581 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் எனவும் புகைப்படம் மூலமாக spnibcid@gmail.com இரண்டு மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என தமிழக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.