அரியலூரில் நூதன முறையில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து உடையார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இரும்புலிக்குறிச்சி, பரணம், உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக நில அளவையர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பலரிடம் ரசாயன பொடி தூவி கொள்ளை அடிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் அப்பகுதி வழியாக செல்லும் பெண்களிடம், ‘உங்களது துப்பட்டா வண்டியில் மாட்டியுள்ளது - சேலை வண்டியில் மாட்டி உள்ளது’ என்று கூறியும் நூதன திருட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்படியான தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டது 2 இளைஞர்கள் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர்கள் நூதன முறையில் ரசாயன பொடி தூவி கொள்ளையடிக்க முயற்சித்த நிலையில், தொடர்ந்து காவல்துறையினரிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருந்துள்ளர்.
இந்த நிலையில் நேற்று இரவு செந்துறையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் பழனியம்மாள் என்ற 50 வயது பெண், செந்துறையில் இருந்து தனது ஸ்கூட்டரில் சொந்த ஊரான நல்லாம்பாளையம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்திருக்கிறார். இவர் சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த அதே இளைஞர்கள் பழனியம்மாளிடம் தங்களது சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர் வண்டியை நிறுத்த முயற்சித்தபோது அந்த கொள்ளையர்கள் ரசாயன பொடி தூவி அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு கொண்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து காவல்துறையிடம் அவர் புகாரளித்ததை தொடர்ந்து, காவல்துறையினர் தங்கள் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் மற்றும் ஜெயங்கொண்டம் துணை காவல் துறை கண்காணிப்பாளர் கலைகதிரவன் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், கடந்த ஒரு வார காலமாகவே விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. பழனியம்மாளின் புகாரைத் தொடர்ந்து, ஆங்காங்கே உள்ள சிசிடிவி கேமரா பதிவின் மூலம் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இறுதியில் இரும்புலிக்குறிச்சி அருகே பல்சர் பைக்கில் சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செந்துறை அருகே உள்ள பூமுடையான்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 27), அதே ஊரைச் சேர்ந்த மற்றுமொருவரான ராஜேஷ் (வயது 24) என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து கடந்த 1 வாரமாக தொடர் வழிப்பறியில் இப்பகுதியில் ஈடுபட்டதோடு சில மாதங்களுக்கு முன் பொன்பரப்பி, ஆனந்தவாடி ஆகிய கிராமங்களிலும் பெண்களிடம் நகைகள் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டதாக விசாரனையில் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகின.
இந்த கொள்ளை சம்பவத்தின் போது பெண்களின் கண் தெரியாமல் இருப்பதற்காக கான்பிளவர் மாவை தூவியதையும் கூறியுள்ளனர். தங்களது கடன் தொல்லையால் இது போன்ற வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிவித்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து 6 லட்சம் மதிப்பிலான 17 சவரன் நகை, 60 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர்களை இரும்புலிக்குறிச்சி போலீசார் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.
கடந்த ஒரு வாரமாக செந்துறை பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வழிப்பறி கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கியது, அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.