குற்றம்

மதுபோதையில் செல்போன் கடையில் சிகரெட் கேட்டு தகராறு - உரிமையாளரை தாக்கிய ரவுடி கைது

Sinekadhara

புதுச்சேரியில் மதுபோதையில் செல்போன் கடையில் சிகரெட் கேட்டு இல்லை என்றதால் உரிமையாளரை தாக்கி அவரது செல்போனை பறித்து சென்ற பிரபல ரவுடி உட்பட இரண்டு பேரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதியைச் சேரந்தவர் அர்சுனன் (20). இவர் புதிய பேருந்து நிலையம் அருகே செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார், இந்நிலையில் நேற்றிரவு அர்சுனன் கடையை அடைத்து கொண்டிருந்தபோது இரண்டு நபர்கள் மதுபோதையில் செல்போன் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது அர்சுனன் இது செல்போஃன் பழுதுபார்க்கும் கடை, இங்கு சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போஃனை பறித்து சென்றுள்ளனர்.

இது குறித்து அர்சுனன் உருளையான்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பறித்து செல்லப்பட்ட செல்போன் எண்ணின் சிக்னலை ட்ராக் செய்து இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அரியாங்குப்பம் பிரபல ரவுடி கட்ட கார்த்திக் என்கிற கார்த்திகேயன் (30) மற்றும் அவரது கூட்டாளி அரவிந்த் குமார் (28) என்பதும், இருவரும் குடிபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள கட்ட கார்த்திக் மீது புதுச்சேரியில் கொலை அடிதடி உள்ளிட்ட 5க்கும் மேற்ப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.