குற்றம்

சென்னையில் காதல் விவகாரத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு; மற்றொரு பெண் உட்பட இருவர் கைது

நிவேதா ஜெகராஜா

சென்னை மதுரவாயலில் பெண்ணின் முகத்தில் அமிலம் வீசிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் காதலனுடன் பழகி வந்ததால் ஆத்திரமடைந்து அமிலம் வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரைவாயில் பகுதியைச்  சேர்ந்தவர் லேகா (வயது 30). நேற்றைய தினம் இவரது வீட்டிற்கு ஐஸ்வர்யா என்ற பெண் சென்றுள்ளார். சென்று கதவை தட்டிய அவர், கதவை திறந்ததும் தான் கையில் வைத்திருந்த கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை லேகா மீது ஊற்றி உள்ளார். இதில் லேகாவுக்கும் அவரது அம்மாவுக்கும் முகத்தில் எரிச்சலுடன் காயம் ஏற்பட்டு அலறியுள்ளனர். சத்தம் கேட்டு அங்கு சென்றவர்கள், அவர்களை மீட்டு அரசு மருத்துமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

தற்போது இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து மதுரவாயல் போலீசில் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது போரூர் மங்களா நகரை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது 37), தீனதயாளன் (வயது 36) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் லேகா பார்த்திபன் என்பவரை காதலித்து வந்ததாகவும்; பின் அந்த காதல் முறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்பின் பார்த்திபனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், ஐஸ்வர்யாவுக்கு லேகாவின் காதல் குறித்து தெரியாமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பார்த்திபனின் நண்பரான தீனதயாளன் என்பவர், லேகா தற்போதும் பார்த்திபனை காதலிப்பதாக ஐஸ்வர்யாவிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

விஷயம் கேட்டு ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, தீனதயாளனை அழைத்து கொண்டு வீட்டில் இருந்த கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை கொண்டு சென்று, இருவர் மீதும் ஊற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும் கொலை மிரட்டலும் விட்டு சென்றிருக்கிறார். இது தெரிய வந்ததையடுத்து இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.