குற்றம்

ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை: பெண்ணின் புகாரால் சிக்கிய ஆன்லைன் கும்பல்

ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை: பெண்ணின் புகாரால் சிக்கிய ஆன்லைன் கும்பல்

webteam

ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பலில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த 3 பேர், ஆபாச படங்களை வாட்ஸ்அப்பில் வெளியிட்டு மிரட்டி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக கைபேசி எண்ணிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வரவழைத்து பெண் ஆய்வாளர் மூலம் விசாரித்தார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் 38 வயது பெண். இவர் கணவரால் கைவிடப்பட்டவர். இவருக்கு 17 வயதில் மகன், 15 வயதில் மகள் உள்ளனர். இவரை சகாபுதீன் என்பவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இருவரும் தனிமையில் இருந்ததை சகாபுதீன் உள்பட 3 பேர் படங்கள் எடுத்து வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல பெண்களிடம் தனிமையில் இருந்த சகாபுதீன் பற்றி அப்பெண்ணிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அப்பெண் அவரை விட்டு பிரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து அப்பெண்ணுடன் தனிமையில் இருந்த படங்களை வைத்துக்கொண்டு சகாபுதீன் உள்பட சிலர் மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அப்பெண் புகார் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் அப்பெண் புகார் அளித்தார். இதை எடுத்து எஸ்.பி., அறிவுறுத்தல் படி, சகாபுதீன் என்ற ஷேக் சகாபுதீன், செய்யது அபுபக்கர் பாதுஷா, தாஜ், செய்யது அலிம் பில் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் கீழக்கரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் விசாரணையில், ஏர்வாடியைச் சேர்ந்த பாதுஷா, அவரது சகோதரர் ஹாஜி ஆகியோரின் ‘ஏர்பாத் நெட் கபே’ ஆன்லைன் சேவை மையத்தில் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வரும் வாடிக்கையாளர்களில் சிலரின் அந்தரங்க படங்களை வைத்து மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. பெண்களின் ஆபாச படங்களை பாதுஷா, ஹாஜி, சகாபுதீன் ஆகியோர் சேர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் அவர்களது நண்பர் செய்யது ஆலிம் என்பவருக்கு அனுப்பி, அவர் மூலம் ஏர்வாடி பகுதியில் உள்ள சிலருக்கு வாட்ஸப் மூலம் புகைப்படங்களை பகிர்ந்தது தெரியவந்தது.

கடையில் இருந்து 4 செல்போன், 1 லேப் டாப் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் மேல் விசாரணைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பாதுஷா, சகாபுதீனை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.