குற்றம்

ஜி.பி.முத்துவுடன் அதிவேக பயணம்: சரணடைந்த யூ-ட்யூபர் TTF வாசனுக்கு ஜாமீன்!

webteam

கோவையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய வழக்கில் யூ-ட்யூபர் டி.டி.எப் வாசன் மதுக்கரை தாலுகா நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

யூ-ட்யூபர் டி.டி.எஃப் வாசன் கடந்த 14ஆம் தேதி, டிக் டாக் மூலம் பிரபலமான மற்றொரு யூ-ட்யூபர் ஜி.பி.முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து கோவையின் பிரதான சாலைகளான திருச்சி சாலை மற்றும் பாலக்காடு பைபாஸில் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை இயக்கி அதனை இணையத்தில் பதிவேற்றி இருந்தார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் பின்னர் சூலூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் டிடிஎப் வாசன் மீது பதியப்பட்டன. இந்த நிலையில் டிடிஎப் வாசன் கோவை மதுக்கரை தாலுகா நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். பின்னர் இருவரின் உத்திரவாதம் பெறப்பட்ட பிறகு அவர் ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் டிடிஎப் இஸ் பேக் என்ற பெயரில், மற்றொரு வீடியோவை தனது யூ-ட்யூப் பக்கத்தில் போட்டிருக்கிறார்.