குற்றம்

குட்கா விற்ற வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு நூதன தண்டனை வழங்கிய திருச்சி நீதிமன்றம்

நிவேதா ஜெகராஜா
திருச்சியில், குட்கா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியுள்ளது. 
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் குட்கா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் உதவி  ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான தனிப்படைபோலீசார் திருவெறும்பூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ரவிக்குமார் என்பவரது டீக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் காட்டூரில் உள்ள காளியம்மாள் என்பவருக்கு சொந்தமான  பெட்டிக் கடையில் சோதனை நடத்தியதில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 40 குட்கா பண்டல்களை போலீசார் கைப்பற்றினர். இவர்கள் தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து ரவிக்குமார், காளியம்மாள் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நிபந்தனை ஜாமினில் விடுவித்த நீதிபதி, அவர்களுக்கு நூதனமாக தண்டனை வழங்கினார். அதாவது, இருவரும் 20 நாட்களுக்கு தினந்தோறும் காவல் நிலையத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தல் வேண்டும் எனவும் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்து அவர்களை ஜாமீனில் விடுவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று இருவரும் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு வந்து காவல் நிலையத்தை கூட்டி சுத்தம் செய்ததுடன், காவல் நிலையத்தில் உள்ள மரத்தில் கட்டப்பட்டுள்ள மண் பாத்திரத்தில் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வைக்கும் பணியையும் செய்தனர்.