குற்றம்

திருச்சி: அடுத்தடுத்து இரண்டு பெண்களுடன் திருமணம் - ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது

kaleelrahman

அடுத்தடுத்து திருமணங்கள் செய்வதற்காக பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்த திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி திருவெறும்பூர் எழில் நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (25). இவர், தனது வீட்டின் அருகாமையில் வசிக்கும் ஒரு பெண்ணை 8 ஆண்டுகளாக காதலித்துள்ளார். இதற்கிடையே திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்னையும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், துவாக்குடியை சேர்ந்த பெண், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் அவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர், தனது முதல் காதலியை பற்றியும், அவரை மறக்க முடியவில்லை என்றும் தனது மனைவியிடம் கூறி இருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி, தனது கணவனை விட்டு பிரிந்து வாழ தொடங்கிவிட்டார்.

இதைத் தொடர்ந்து சதீஷ் தனது முதல் காதலியை சந்தித்து, தனக்கு திருமணமானதை மறைத்து இரண்டாவதாக முதல் காதலியை திருமணம் செய்துகொண்டார். அவர், கர்ப்பமான நிலையில், பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தன்னுடன் இருக்க முதல் மனைவியை அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே அவரது, ஆபாச புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகவும் கூறி சதீஷ் அவரை மிரட்டியுள்ளார்.

இதில், பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் திருச்சி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், தனி மனித உரிமைகளை மீறியதாகவும், திருமணமானதை மறைத்து இரண்டாவதாக சட்டவிரோதமாக திருமணம் செய்துகொண்டதாகவும் மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.