குற்றம்

மதுரை: குடும்பத் தகராறில் தூங்கிக்கொண்டிருந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த சோகம்

மதுரை: குடும்பத் தகராறில் தூங்கிக்கொண்டிருந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த சோகம்

kaleelrahman

மதுரையில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கணவரே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் இவருக்கும் அஞ்சனா தேவி என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் இன்று நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது பணி முடித்து வீட்டிற்கு வந்த வேலாயுதம் உறங்கி கொண்டு இருந்த மனைவி அஞ்சனா தேவியின் தலையில் வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை மகன் கண் முன்பே தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்,

இதில் பலத்த காயமடைந்த மனைவி அஞ்சனாதேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் கணவர் வேலாயுதத்தை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூங்கும்போது கிரைண்டர் கல்லை போட்டு கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.