குற்றம்

”எங்க வந்து யார் கிட்ட காசு கேக்குற?”- வடமாநில ஹெல்மட் வியாபாரியிடம் போதை இளைஞர்கள் அடாவடி

webteam

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் பட்டப் பகலில் ஹெல்மெட் வியாபாரம் செய்து வந்த வட மாநிலத்தவருக்கு அரிவாள் வெட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதீத கஞ்சா போதையில் டியோ வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிகாரை சேர்ந்தவர் ராஜ குமார் சிங். இவர் திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலை ஓரம் ஹெல்மெட் கடை நடத்தி வருகிறார். அப்போது கஞ்சா போதையில் டியோ வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ராஜ குமார் சிங்கிடம் ஹெல்மட் வாங்குவதைப்போல் நடித்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த  ஹெல்மெட் எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு பணம் தராமல் அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. எடுத்த ஹெல்மெட்க்கு ராஜ்குமார சிங் பணம் கேட்டுள்ளார். ”எங்க வந்து யார்கிட்ட பணம் கேட்கிறாய். நீ வேண்டும் என்றால் எனக்கு மாமூல் கொடு” எனக் கூறி மறைத்து வைத்து இருந்த பட்டாகத்தியை எடுத்து ராஜ்குமார சிங்கை தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து டியோ வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ராஜ்குமார் உடனடியாக அருகில் உள்ள திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பட்டாகத்திகள் கொண்டு வெட்டு வாங்கிய நபரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் தனிப்படை போலீசார் பட்டாகத்திகளைக் கொண்டு தாக்கியவர்களை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு வலை வீசி தேடினர். அப்போது அவர்கள் ஆவடியில் பதுங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து இருவரையும் கைது செய்தனர்

இருவரும் ஆவடி பகுதியை சேர்ந்த டாட்டு சதீஷ் மற்றும் ராகேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அதீத போதையில் இருப்பதால் என்ன நடந்தது என்று தலைகால் தெரியாமல் தற்போது வரை இருவரும் நடந்து கொள்கின்றனர். அதீத கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்துடன் வலம் வந்து பட்டப்பகலில் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் ஆவடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.