குற்றம்

பெற்ற குழந்தைகளை கொலை செய்த தாய் கைது: நடந்தது என்ன?

webteam

விழுப்புரம் அருகே பெற்ற குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், கட்டமுத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரதுமனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் 4 வயதில் மிதுன் என்ற மகனும் இருந்துள்ளனர். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு, மூத்த மகன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த வாரத்திற்கு முன், சிலம்பரசன் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் பனங்குப்பத்தில் வாடகை வீட்டில் குடியேறினார்.

இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி வீட்டிலிருந்த கழிவறை தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் மிதுன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால் வீட்டிலிருந்த தாய் ஜெயசித்ரா தலைமறைவானார். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயசித்ராவை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று கோலியனுார் கூட் ரோட்டில் நின்றிருந்த ஜெயசித்ராவை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், தனது இரண்டு மகன்களையும் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக ஜெயசித்ரா ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் டி.ஜெயக்குமார் கூறுகையில், குற்றவாளிக்கு இளம் வயதில் திருமணமானதால் நீண்டகாலமாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளதாகவும் இரண்டாவது பிரசவத்திற்கு பிறகு அவரின் மன அழுத்தம் இன்னும் அதிகமாகியுள்ளதாகவும் ஜெயசித்ரா கூறியதாக தெரிவித்தார். 

மேலும் அவரது மன அழுத்தத்தின் காராணமே குழந்தைகளை கொலை செய்ய தூண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர், குற்றவாளி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.