குற்றம்

”15 வயது மகளை 10 நாட்கள் ஆகியும் மீட்கவில்லை”.. போலீசார் மீது பெற்றோர் அதிர்ச்சி புகார்!

webteam

மது வியாபாரி ஒருவர் தனது 15 வயது மகளை கடத்தி வைத்திருப்பதாக வசந்தி என்பவரால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

10 நாள்கள் கடந்தும் சிறுமி மீட்கப்படாததால் தாயார் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே வேலங்குடியைச் சேர்ந்த வசந்தி என்பவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவர் கொல்லுமாங்குடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் செவிலியர் டிப்ளமா படிப்பு படித்து வருகிறார். மாணவி அவர் வசிக்கும் பகுதியில் மது விற்பனை செய்யும் நிவாஸ் என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு அச்சிறுமி நிவாஸுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது தாய் வசந்தி பேரளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தனது மகளை மீட்டுத் தருமாறு கூறியுள்ளார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வசந்தி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மது வியாபாரிடம் சிக்கியுள்ள தனது மகளை மீட்டுத் தருமாறு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரத்திடம் புகார் அளித்தார். இந்நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.