குற்றம்

வாகன சோதனையில் சிக்கிய வெள்ளை திரவம்: ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

வாகன சோதனையில் சிக்கிய வெள்ளை திரவம்: ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

kaleelrahman

செங்குன்றம் அருகே உரிய ஆவணங்களின்றி லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 12000 லிட்டர் வெள்ளை திரவம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலப்பட பெட்ரோல், டீசல் சென்னைக்குள் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் டேங்கர் லாரிகளை மடக்கி ஆய்வு செய்தனர்.

அப்போது சென்னை நோக்கி வந்த டேங்கர் லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். அதில், வெள்ளை நிறத்தில் எண்ணெய் போன்ற எளிதில் தீப்பற்றும் திரவம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 12000 லிட்டர் வெள்ளை திரவத்தை டேங்கர் லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து லாரி ஓட்டுநர் கோவிந்தசாமியை கைது செய்த திருவள்ளூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.