குற்றம்

திருப்பூர்: விடுதியில் 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போதகர் கைது

webteam

திருப்பூர் பகுதியில் விடுதியில் தங்கி படித்து வந்த 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் போதகரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் ஊத்துக்குளி பகுதியில் தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் தங்கியிருந்து அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக போதகர் ஆண்ட்ரூஸ் என்பவர் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 9-ம்வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி ஒருவரும் விடுமுறையில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் பெற்றோரிடம் விடுதி காப்பாளர் ஆண்ட்ரூஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தனர்.

புகாரில் விடுதி காப்பாளரும் போதகருமான ஆண்ட்ரூஸ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன் வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டிய புகார் எழுந்துள்ளது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆண்ட்ரூசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.