குற்றம்

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 47 வயது நபர் - அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

Sinekadhara

உடுமலை அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் 47 வயது நபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கல்லாபுரத்தில் 1/07/2020 அன்று 8 வயதுடைய சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த அம்மாவாசை(47) என்ற நபர் கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அம்மாவாசை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி சுகந்தி, குற்றவாளி அம்மாவாசைக்கு 40 வருட சிறை தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். மேலும் சாட்சிகளை சிறந்த முறையில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த உடுமலை அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.