அண்ணன் கைது pt desk
குற்றம்

திருப்பூர் | காதலை கைவிட மறுத்த தங்கை - ஆணவக் கொலை செய்த அண்ணன் - பரபரப்பு வாக்குமூலம்

திருப்பூர் அருகே காதலை கைவிட மறுத்ததால் கல்லூரி மாணவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஹாலித் ராஜா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பருவாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் தண்டபாணி - தங்கமணி தம்பதியர். இவர்களுக்கு சரவணன் என்ற மகனும், வித்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கோவை அரசு கல்லூரியில் படித்து வந்த வித்யா, திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், வித்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 30ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோ விழுந்ததில் வித்யா உயிரிழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தார் வித்யாவின் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வித்யாவின் காதலன் அளித்த தகவலின் பேரில், பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வித்யாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தும் படி காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பல்லடம் வட்டாட்சியர் தலைமையில். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் உதவியுடன் உடலை நேற்று மாலை தோண்டி எடுத்து சுடுகாட்டிலேயே பிரேத பரிசோதனை செய்தனர். இதில், வித்யா தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல் பாகங்களை சோதனைக்காக மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் அண்ணன் சரவணன் ஆகிய இருவரிடமும் காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது தங்கையிடம் பலமுறை காதலை கைவிடுமாறு தெரிவித்த நிலையில் அவர் காதலை கைவிட மறுத்தார். இதனால் ஆத்திரத்தில் இரும்புக் கம்பியால் அவரது தலையில் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரவணனை கைது செய்த போலீசார், தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆணவக்கொலை இல்லை - திருப்பூர் எஸ்.பி. கிரிஷ் யாதவ் தகவல்:

கல்லூரி மாணவி கொலை வழக்கில், காதலை கைவிட்டு விட்டு நன்றாக படிக்குமாறு அண்ணன் சரவணம் தெரிவித்த நிலையில், வித்யா மறுத்துப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலை நடந்த சம்பவம் பெற்றோர்களுக்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் குமார் யாதவ் தெரிவித்தார்.