தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது pt desk
குற்றம்

திருப்பூர் | தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

திருப்பூரில் கத்தியைக் காட்டி மிரட்டி பொதுமக்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: ஹாலித் ராஜா

திருப்பூர் சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (25). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிர் திசையில் நடந்து வந்த 3 பேர், வெங்கடேசனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

கைது

இதுகுறித்து வெங்கடேசன் நல்லூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக உதவி கமிஷனர் விஜயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (28), காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த பாலாஜி சரவணன் (28), திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த ராம்குமார் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மூன்று பேரும் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் செல்போன் பறிப்பதை தொடர்ந்து செய்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.