திருச்சி பீமநகரில் காவலர் குடியிருப்பில் இளைஞர் தாமரைச்செல்வன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
திருச்சி பீமநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(24). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று காலை பீமநகர் அருகே உள்ள தனது வீட்டில் இருந்து மார்சிங்பேடை பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாமரைச் செல்வனின் இரு சக்கர வாகனத்தை திடீரென வழிமறித்து மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி தாமரைச்செல்வன் கீழே விழுந்துள்ளார். அந்த கும்பல் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். தாமரை செல்வன் உயிர் தப்பிக்க அருகிலிருந்த காவலர் குடியிருப்புக்குள் அடைக்கலம் தேடி ஓடியுள்ளார்.
இரவு பணியை முடித்துவிட்டு வீட்டில் உள்ள தனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்ல போக்குவரத்து காவலர் செல்வராஜ் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டுக்குள்ளே துரத்தி சென்ற கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் சமையல் அறையில் நுழையவிட்டு, தாமரை செல்வனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் சிபின் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த கொலை வழக்கில் தற்போது 5 பேரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. காலையில் ஒருவர் பிடிபட்ட நிலையில், தற்போது சதீஸ், பிரபாகரன், நந்து, கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “காவலர் குடியிருப்பில் புகுந்து ஒருவர் வெட்டி சாய்க்கப்பட்டு இருக்கிறார். சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது. இதை எல்லாத்தையும் விட்டுவிட்டு சார் சார் சார் என்கிறார்கள்... தூக்கத்தில் இருந்தால் கூட சார் சார் என்கிறார்கள்.. முதலில் சட்ட ஒழுங்கை பாருங்கள்.. மக்கள் பிரச்சனையை பாருங்கள் பிறகு sir பற்றி பேசலாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “திருச்சி பீமாநகரில் உள்ள காவலர் குடியிருப்பிற்குள்ளேயே ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற உண்மையை நெற்றியில் அடித்தாற்போல நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், “சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் வாழும் பகுதியிலேயே ஓர் இளைஞர் ஓட , ஓட விரட்டி படுகொலை செய்யப் படுகிறார் என்றால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். கொலைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கத் தவறிய திமுக, சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியை இழந்து விட்டது. அனைத்துக்கும் ஒரு முடிவு உண்டு, கொலை, கொள்ளைகளைத் தடுக்கத் தவறிய திமுக அரசுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். அதன் மூலம் தமிழகத்தில் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கு நிலை நாட்டப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.