குற்றம்

தேனியில் 182 ஏக்கர் அரசு நில அபகரிப்பு, கனிமவள கொள்ளை: மூவர் கைது

தேனியில் 182 ஏக்கர் அரசு நில அபகரிப்பு, கனிமவள கொள்ளை: மூவர் கைது

நிவேதா ஜெகராஜா

தேனியில் 182 ஏக்கர் அரசு நில அபகரிப்பு மற்றும் பல கோடி ரூபாய் கனிமவள கொள்ளை குறித்த வழக்கில் அன்னப் பிரகாசம் உள்ளிட்ட மூவரை தேனி மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மூவரையும் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலம் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது மற்றும் அதிலுள்ள கனிமங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தேனி மாவட்ட சிபிசிஐடி போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இதையடுத்து வழக்கின் முக்கிய நபராக கருதப்படும் பெரியகுளம் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் அன்ன பிரகாஷ் மற்றும் நில அளவையர் பிச்சுமணி, அலுவலக உதவியாளர் அழகர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் தனியாருக்கு பட்டா போட்டு விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பெரியகுளம் சார் ஆட்சியர் நடத்திய விசாரணையில் 182 ஏக்கர் அரசு நிலம் அரசு அதிகாரிகள் துணையுடன் முறைகேடாக தனியாருக்கு கொடுத்தது நிரூபனமானது.

இதையடுத்து முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 8 பேரை பணி இடைநீக்கம் செய்தும் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்தும் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நடவடிக்கை எடுத்தார். தனியாருக்கு சென்ற அரசு நிலங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டு மீண்டும் அரசு நிலங்களாக மாற்றப்பட்டது. இந்நிலையில் அரசு நிலத்தை அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி முறைகேடாக தனியாருக்கு விற்பனை செய்தது, அபகரித்தது குறித்து பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் அளித்தார்.

அந்த புகாரின்படி பெரியகுளம் தாசில்தாராக பணிபுரிந்த ரத்னமாலா , கிருஷ்ணகுமார், ஆர்டிஓ., க்களான ஆனந்தி, ஜெயப்பிரதா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், துணை தாசில்தார்கான சஞ்சீவ் காந்தி, மோகன்ராம், நில அளவையர் பிச்சைமணி ஆகிய 8 அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அதிமுக பெரியகுளம் ஒன்றிய முன்னாள் செயலாளர் அன்ன பிரகாசம் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் விசாரணை நடந்து வந்தது.

அப்போது அபகரிக்கப்பட்ட அரசு நிலத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்த அறிக்கை பெரியகுளம் சார் ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. பின் வழக்கில் புதிய திருப்பமாக மாவட்ட குற்றப்பிரிவில் இருந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி சரவணன் தலைமையில் விசாரணை துவங்கியது. விசாரணையை தொடர்ந்து, அதிமுக பெரியகுளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் மற்றும் நில அளவையர் பிச்சமணி, தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவியாளர் அழகர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்த மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அடுத்தப்படியாக பெரியகுளம் கோட்டாட்சியர்களாக பணியாற்றிய ஆனந்தி மற்றும் ஜெயப்ரீதா ஆகியோருடன் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் சிபிசிஐடி போலீசார். விசாரணை துவங்கி 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு மற்றும் பல கோடி ரூபாய் கனிமவள கொள்ளை குறித்த வழக்கில் முக்கிய புள்ளி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்ட விவகாரம், அரசு நில அபகரிப்பு வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.