puducherry case
puducherry case file image
குற்றம்

வீட்டைவிட்டு வெளியேறிய இளம்பெண்.. தங்க இடம் கொடுப்பதாக கூறி பாலியல் தொல்லை.. புதுச்சேரியில் பகீர்!

யுவபுருஷ்

கன்னியாக்குமாரியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் புதுச்சேரி திப்புராயப்பேட்டை பகுதியில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பாக தனது சகோதரியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர், தனது அம்மா வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறி புதிய பேருந்து நிலையம் சென்றுள்ளார்.

ஆனால், ஊருக்கு செல்ல கையில் பணம் இல்லாததால் எங்கு செல்வது என தெரியாமல் குழம்பியுள்ளார். இந்நிலையில், பெண்ணின் மனநிலையை அறிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுனர், அவரை அங்கிருந்து முதலியார்பேட்டை அனிதாநகர் பெட்ரோல் நிலையம் அருகே அழைத்து வந்து, அந்த இடத்தில் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர் சத்தம் போடவே, பயந்து போன ஆட்டோ ஓட்டுனர் அவரை அங்கேயே இறக்கி விட்டு புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.

அங்கு, தனியாக நின்றிருந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்த 3 பேர், தங்க இடம் கொடுப்பதாக கூறி, அனிதா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணுக்கு 3 பேரும் சேர்ந்து பாலியல் தொல்லைகொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் 2 நாட்கள் அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இந்நிலையில், மூவரும் வெளியே சென்ற நிலையில், தப்பித்த இளம்பெண், அருகில் உள்ள கடைக்கு வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநர் சாதிக்பாட்ஷா, தினேஷ், அரவிந்தன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.