குற்றம்

’ஹெல்லோ பிரபா ஒயின்சாப் ஓனருங்களா’-வடிவேலு பாணியில் டாஸ்மாக்கில் திருடியவர்கள் கைது

webteam

கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் சுவற்றை துளையிட்டு கடையிலேயே சாவகாசமாக மது அருந்திய போது சிக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் விற்பனையாளர் நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நள்ளிரவு போலீசார் ரோந்து பணியின் போது டாஸ்மாக் கடையின் சுவறு துளையிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த துளையின் வழியாக போலீசார் டார்ச் லைட் அடித்து பார்த்த போது அங்கு 2 பேர் மது அருந்தி கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் துளையின் வழியாக வெளியேற்றிய போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றைத் துளையிட்டு கல்லா பெட்டியில் வைத்திருந்த 14,000ரூபாய் ரொக்கப் பணத்தை திருடியதும் தெரியவந்தது. மற்றும் மது பாட்டில்களையும் திருடி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார் கவரைப்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.