செய்தியாளர்: ராஜன்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள புங்கவர்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். போலி சாமியாரான இவர், அருள் வாக்கு கூறுகிறேன் என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், தன்னிடம் வரும் நபர்களிடம் பூஜை செய்தால் தொழில் வளம் பெருகும் பணம் இரட்டிப்பு செய்து தருகிறேன் எனக்கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவரது ஆசை வார்த்தையில் ஏமாந்து பல லட்சம் ரூபாய் பணத்தை இவரிடம் கொடுத்து பலர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட தூத்துக்குடி ஏரல் பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் மற்றும் அவரது நண்பர் ஆனந்தகுமார் ஆகியோர் போலி சாமியார் பாலசுப்பிரமணியத்திடம் சுமார் 77 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர்.
இதையடுத்து பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மகன் அய்யாதுரை ஆகியோர் குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளனர்.
இதேபோல், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், மாரிமுத்து, இருளப்பன் ஆகியோரிடம் சுமார் 44 லட்சம் ரூபாயும், எட்டயபுரத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணு என்பவரிடம் ஐந்து லட்சமும் சாந்தி என்பவரிடம் 17 லட்சம் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன், கமலக்கண்ணனிடம், திருமலைசாமி ஆகியோரிடம் சுமார் 90 லட்சம் என சுமார் 20க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தனர் இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து தலைமறைவாக இருந்த போலி சாமியார் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் ஐயாதுரை ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.