குற்றம்

திருத்தணி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

webteam

திருத்தணி அருகே காணாமல் போன ஆட்டுக் குட்டியை தேடிச் சென்ற 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே. பேட்டை அருகே தாமனேரி கிராமம் ரங்கா புரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த இரண்டாம் தேதி காணாமல் போன தனது ஆட்டுக் குட்டியை தேடி தாமனேரி மலைப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது ஆதி வராதபுரம் காலனி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பஞ்சாட்சரம், கத்தியைக் காட்டி மிரட்டி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சாட்சரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.