குற்றம்

தேனி: தீபாவளி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக போலி நிருபர் உட்பட இருவர் கைது

webteam

தீபாவளி துப்பாக்கியை காட்டி மிரட்டிய போலி நிருபர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரின் கணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சியின் ஆறாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் அழகம்மாள். இவர், தனது வார்டு பகுதிகளில் முறையான தூய்மை பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என தொடர்ச்சியாக அதே பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் முறையிட்டு தொடர்ந்து தனது பகுதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அழகம்மாளின் கணவர் கணேசன் மற்றும் அவரது நண்பரான வல்லரசு ஆகிய இருவரும் சேர்ந்து பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், வல்லரசு தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு தனது இடுப்பில் வைத்துக் கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் அனைத்தையும் பாண்டியனின் உறவினர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாண்டியன், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வல்லரசு என்பவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல் துறையினர் வல்லரசை கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், வைத்திருந்த துப்பாக்கி தீபாவளிக்கு பயன்படுத்தப்படும் விளையாட்டு துப்பாக்கி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தீபாவளி துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தும் வகையில் மிரட்டியதாக போலி நிருபர் வல்லரசு மற்றும் அவரை தூண்டிவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டக் கூறிய ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரின் கணவர் கணேசன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.