குற்றம்

தேனி: காரில் கடத்தி வந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது

webteam

காரில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.

தேனி மாவட்ட காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு காவலர்கள் பெரியகுளம் பகுதியில் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காரை ஓட்டிவந்த தேனியைச் சேர்ந்த செல்வராஜ் (49) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் செல்வராஜ் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை, பொருட்களை மொத்த விற்பனை செய்யும் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த வியாபாரி ரமேஷ் (38) தினேஷ் (19) மற்றும் புதுகோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த புகையிலை மொத்த வியாபாரி பழனி ஆண்டி (36) ஆகியோரை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் 500 வெளி மாநில மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் பெரியகுளம் சிறையில் அடைத்துள்ளனர்.