குற்றம்

"மனைவி, குழந்தைகளைப் பிரித்ததே காரணம்!" - தந்தையை வெட்டிக் கொன்றதாக மகன் கைது

kaleelrahman

மனைவியை பிரிந்து வாழ்வதற்கு காரணமான தந்தையை, மகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர், வீட்டில் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அய்யாத்துரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அய்யாத்துரைக்கு 4 மகன்கள் உள்ள நிலையில், மூன்றாவது மகன் ஜெயக்குமாரின் மனைவி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இரண்டு குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதற்கு தனது தந்தைதான் காரணம் எனக் கூறி ஜெயக்குமார் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அய்யாத்துரையின் மகன் ஜெயக்குமார் வீட்டில் இருந்ததாக அய்யாத்துரையின் மற்றொரு மகன் பூமிநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவதானபட்டி காவல்துறையினர் ஜெயக்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது மனைவி குழந்தைகளை பிரிந்து வாழ காரணமான தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்றதாக ஜெயக்குமார் வாக்குமூலம் கொடுத்ததை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தந்தையை மகனே அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.