குற்றம்

தேனி: சிகிச்சையில் இருந்த குழந்தை உயிரிழப்பு

Sinekadhara

தேனியில் இறந்துவிட்டதாக பெற்றோரிடம் அளிக்கப்பட்டு, உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை இன்று உயிரிழந்தது.

தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த 6 மாத கர்ப்பிணியான ஆரோக்கிய மேரிக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டு, தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குறைபிரசவம் என்பதால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி மூடிப்போட்ட வாளியில் அடைத்து மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

அதே வாளியில் குழந்தையை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்ற தம்பதி, அடக்கம் செய்ய முயன்றபோது, குழந்தைக்கு இதயத் துடிப்பு இருந்தது தெரியவந்தது. உடனடியாக மீண்டும் தேனி அரசு மருத்துவமனையில் குழந்தையை அழைத்துச்சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று 12 மணியளவில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார். குழந்தை 700 கிராம் எடை மட்டுமே இருந்ததாகவும், மேலும் குறை பிரசவம் என்பதாலும் எவ்வளவோ முயன்றும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி பெற்றோரிடம் ஒப்படைத்த இரண்டு மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்களுக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.