குற்றம்

தேனி: மீன் கடைக்காரரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் - உணவு பாதுகாப்பு அதிகாரி கைது

Sinekadhara

தேனியில் மீன் கடைக்காரரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். 

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே மீன் கடை வைத்துள்ள திருமலை பாண்டி என்பவரின் கடையில் ஆய்வுசெய்த தேனி அல்லிநகரம் நகராட்சி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம், அபராதம் விதிக்காமல் இருக்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். திருமலைப்பாண்டி இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்ததின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் கருப்பையர, ஆய்வாளர் ஜெயப்பிரியா தலைமையிலான குழு தேனி பழைய பேருந்து நிலையம் வளாகத்திலுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் மறைந்திருந்து காத்திருந்தனர்.

அவர்கள் திட்டமிட்டபடி, திருமலை பாண்டியிடம் பவுடர் தடவிய நோட்டுகள் கொடுக்கப்பட்டது. அதை அவர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சண்முகத்திடம் கொடுக்க மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சண்முகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், லஞ்சமாக கொடுத்த 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.