குற்றம்

தேனி: சிறுமியை திருமணம் செய்ததாக கட்டடத் தொழிலாளி போக்சோவில் கைது

kaleelrahman

தேனியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்..

கொரோனோ ஊரடங்கு காலகட்டத்தில் தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 15 வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தகவலின் பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி மணி (31) என்பவருக்கு சிறுமியின் பெற்றேரே கடந்தாண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துவந்த போது தான் உண்மை வெளியானது. இதையறிந்த மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமியிடம் விசாரணை நடத்தி, உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து சிறுமியை திருமணம் செய்த அவரது கணவர் மணியை கைது செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருமணத்துக்கு உடந்தையாக இருந்த மணியின் தாய், தம்பி, சிறுமியின் தாய், தந்தை ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.