குற்றம்

17 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி – போக்சோவில் கைதான கணவர்

webteam

பெரியகுளம் அருகே 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் (29) என்ற இளைஞருக்கு அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணை பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக பெண்களை அனுமதிக்கும் போது ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது தற்பொழுது நடைமுறையில் உள்ளது.

அதன் அடிப்படையில் செல்வகுமார் என்பவரின் மனைவி பிரசவத்தின் போது கொடுத்த ஆதார் குறிப்பில் அவருக்கு 17 வயது கூட பூர்த்தி அடையாத நிலையில் 16 வயது சிறுமிக்கு திருமணமாகி உள்ளதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 17 வயது சிறுமியை; குழந்தை திருமணம் செய்த கணவர் செல்வகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.