குற்றம்

சென்னை கிரைம்: நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை; கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை

JustinDurai

சென்னை பள்ளிக்கரணை அருகே சரத் என்ற இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.

பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சரத். நேற்றிரவு வீட்டு வாசலில் அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியது. இதில் சரத், தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 நாட்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டர். அதற்குள் கொலை கும்பல் தப்பி சென்றது. சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாக்கம் போலீசார் சரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து காவல்துறையினர் கொலை கும்பலை தேடி வருகின்றனர்.

5 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை 

இதேபோல், சென்னை தாம்பரம் சானிடோரியத்தில் வடிவழகன் என்ற ரவுடி வெட்டிகொலை செய்யப்பட்டார். செனாய் நகர் முத்தையப்பன் தெருவில் வடிவழகன் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. முதற்கட்ட விசாரணையில் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன், சுரேஷ், காரமணி வினோத் உள்ளிட்ட 5 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட வடிவழகன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.