குற்றம்

மது தகராறில் பெற்ற தாயை கொன்ற மகன்

மது தகராறில் பெற்ற தாயை கொன்ற மகன்

webteam

சென்னை கீழ்ப்பாகத்தில் மதுவுக்கான தகராறில் தாயை மகன் கொலை செய்துள்ளார். 

சென்னை கீழப்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மனைவி கலாவதி (வயது 54). இவர்களது மகன் நீலகண்டன் (வயது 25).கலாவதிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு கலாவதி குடிபோதையில் தனது வீட்டிற்கு கீழே சாலையில் படுத்திருந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து அவரது மகன் நீலகண்டனிடம் தெரிவித்துள்ளார். சாலையில் மதுபோதையில் கிடந்த தாயின் மீது தண்ணீர் ஊற்றி போதை தெளியவைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். கலாவதியை வீட்டில் விட்டுவிட்டு நீலகண்டன் வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் நீலகண்டன் தனக்காக வாங்கி வைத்திருந்த மதுவையும் கலாவதி குடித்து பாட்டிலை காலி செய்துவிட்டார்.

வெகுநேரமாகி வீட்டிற்கு வந்த நீலகண்டன் தான் வாங்கி வைத்திருந்த மதுவை தேடியுள்ளார்.அப்போதுதான் அதனை கலாவதி அருந்தியது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்தவர் கலாவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நீலகண்டன் தனது தாயை கீழே தள்ளிவிட்டார். சுவரில் மோதி தலையில் அடிப்பட்ட கலாவதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனைக்கண்ட பொதுமக்கள் நீலகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கலாவதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீலகண்டனை கைது செய்த டிபி சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

(தகவல்கள்: கார்த்திக் சுப்ரமணி, புதிய தலைமுறை செய்தியாளர்)