வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த கொள்ளையர்கள் கஞ்சா போதையில் வீடியோ வெளியிட்டு சிக்கி கொண்டனர்.
அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் விக்ரம் (19). இவர், கடந்த 20 ஆம் தேதி தனது நண்பருடன் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் கீரி 1 சவரன் நகை, புல்லட் பைக் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது.
இதில், காயமடைந்த விக்ரம் அவரது நண்பர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதையடுத்து வழிப்பறி சம்பவம் குறித்து ஐசிஎப் காவல் நிலையத்தில் விக்ரம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் இளைஞர்கள் நான்கு பேர் கஞ்சா போதையில் கத்தியுடன் கானா பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ வைரலானது. இது குறித்து போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து போலீசார், வீடியோ வெளியிட்ட நபர்களை அடையாளம் கண்டு இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பெரம்பூரைச் சேர்ந்த இளமாறன் (19) ஆனந்தகுமார் (23) என்பது தெரியவந்தது. மேலும் கைதான இளம்மாறன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விக்ரம் என்ற இளைஞரை தாக்கி செயின் ,புல்லட் பைக்கை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. லோக்கல் ரவுடியான இளமாறன் மீது கொலை மிரட்டல், வழிப்பறி, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், புல்லட் பைக், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடிவருகின்றனர்.