குற்றம்

எரிந்த நிலையில் வாலிபர் சடலம்: போலீசார் தீவிர விசாரணை

webteam

பட்டுக்கோட்டையில் முகம் எரிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சதோப்பு வடக்கு அம்மன்நகர் பின்புறம் ஒரு அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பின்புறம் அடர்ந்த கருவேலமரக்காடு ஒன்று உள்ளது. இந்தக் காட்டுப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் முகம் லேசாக எரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சிலர் காலை அந்தப் பகுதி வழியாக சென்ற போது இதைக் கண்டு கிராம நிர்வாக அலுவலர் சரவணக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் இது குறித்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, எஸ்ஐ தென்னரசு மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விரைந்து வந்து பார்க்கையில், பிரேதத்தின் அருகில் இரண்டு மது பாட்டில் கிடந்தது. மேலும், இவருடைய வலது காது சிறிய அளவில் இருந்தது. அது மட்டுமில்லாமல் வலது கையில் சிங்கம் முத்திரை குத்தப்பட்டு இருந்தது. இடது கையில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டிருந்தது.

மேலும், இவருடைய முகம் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்டவர் யார்? அவர் எந்த ஊர்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரைக் கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.