குற்றம்

வீட்டு வேலைக்கு வர மறுத்த தாய்; மகளின் பெயரில் போலி திருமணப் பத்திரிக்கை அடித்த நபர் கைது

kaleelrahman

புதுக்கோட்டை அருகே வீட்டு வேலைக்கு தாய் வராத ஆத்திரத்தில் அவரது 17 வயது மகளுக்கு போலி திருமணப்பத்திரிகை அடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் ஆறு மாதத்திற்கு முன்புவரை முத்துமணி என்ற கணவனை இழந்த பெண் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரமூர்த்தியின் நடத்தை சரியில்லாததால் அங்கு வேலைக்கு செல்வதை முத்துமணி நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. 


இதன் பின்பு சுந்தரமூர்த்தி அவரை பலமுறை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் முத்துமணி மறுத்துவிடவே,ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி அப்பெண்ணின் 17 வயது மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக போலியாக பத்திரிகை அச்சடித்து பல்வேறு பகுதிகளில் கொடுத்துள்ளார்.

மேலும் முத்துமணியின் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவரது வீட்டிலும் அந்த பத்திரிகையை வைத்துவிட்டு அவரது வீட்டினுள் இருந்த ஆதார் கார்டு பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துமணி சுந்தரமூர்த்தியிடம் கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.


இதையடுத்து இச்சம்பவம் குறித்து முத்துமணி, ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது குடும்பத்தின் பெயரை கெடுக்கும் வகையில் தனது சிறுவயது மகளுக்கு போலியான திருமணப் பத்திரிகை அடித்து அவமானப்படுத்திய சுந்தரமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


முத்துமணி அளித்த புகாரின் அடிப்படையில் சுந்தரமூர்த்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.