டெல்லியில் கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நகையைக் கொள்ளையடித்து சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் தயால்பூர் பகுதியில் கடந்த மாதம் 26ஆம் தேதி பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடுரோட்டில் நடந்த சென்றார். இவரிடம் நகை இருப்பதை, அப்பகுதியில் இருந்த 2 இளைஞர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதையடுத்து தனியே நடந்த சென்ற அப்பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் அப்பெண்ணை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த நகையைப் பறித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் புகாரின் அடிப்படையில் டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிந்தனர்.
பின் நகைப்பறிப்பு சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சங்கிலிப் பறிப்பு சம்பவம் அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதன்பின்னர் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதனை வைத்து காவல்துறையினர் தீவர விசாரணையில் இறங்கி நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர். பின் அப்பெண்ணிடம் இருந்து பறித்த நகையை மீட்டனர்.