குற்றம்

‘5 கோடி ரூபாயை நடிகர் விமல் ஏமாற்றிவிட்டார்’ - படத் தயாரிப்பாளர் புகார்

JustinDurai

நடிகர் விமல் 5 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் படத் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்.

சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. தொழிலதிபரான இவர் அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நடிகர் விமல் 5 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கோபி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், "கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் விமல் தன்னை அணுகி, "மன்னர் வகையறா" திரைப்படத்தை தானே தயாரித்து நடிக்க இருப்பதாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் கொடுத்து உதவுமாறு கேட்டார். பட வெளியீட்டிற்கு முன்பே லாபத்துடன் தொகையை திருப்பித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்தார். இதனை நம்பி 5 கோடி ரூபாய் விமலிடம் கொடுத்தேன். அதற்காக ஒப்பந்தமும் போட்டுக்கொண்டோம்.

இதனையடுத்து "மன்னர் வகையறா" படம் வெளியாகி நல்ல லாபம் எடுத்த போதிலும், தன்னிடம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வருகிறார்.  பல மாதங்கள் கழித்து 1.30 கோடி கடனை திருப்பி செலுத்தி, மீத தொகையை 6 மாதத்திற்குள் தருவதாக விமல் தெரிவித்தார்.

பின்னர் பொய்யான காரணங்களை கூறி விருகம்பாக்கத்தில் என் மீது விமல் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து விமலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது 3 கோடி ரூபாய்  தருவதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒப்புக்கொண்டார். ஆனால் இதுவரை பணம் தராமல் ஏமாற்றி வருவதால், இது குறித்து விமலிடம் கேட்கும் போது கொலை மிரட்டல் விடுக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.  கடந்த 4 வருடங்களாக  5 கோடி ரூபாய் தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்கும்படி புகாரில் அவர் வலியுறுத்தியுள்ளார்.