ஜகதீசன்
ஜகதீசன்  Puthiyathalaimurai
குற்றம்

நீட் தேர்வில் அடுத்தடுத்து தோல்வி; உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்-விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு

PT WEB

இந்தியாவில் மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்றால் நீட் தேர்வை கட்டாயம் எழுதி தேர்ச்சிப் பெற வேண்டும். நீட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தபட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் தொடங்கி பாமர மக்கள் வரை நீட் தேர்வுக்கு எதிராக தங்களது போராட்ட குரலை ஓங்கிகொண்டுதான் இருக்கின்றனர். அதன் விளைவாக தான் நீட் தேர்வு விலக்கு மசோதாவும் தமிழக ஆளுருக்கு அனுப்பபட்டது.

Neet - Suicide

ஆளுநரிடம் பல்வேறு நாட்கள் கிடப்பில் கிடந்த இந்த நீட் விலக்கு மசோதா வெகுநாட்களுக்கு பிறகு குடியரசு தலைவருக்கு அனுப்பபட்ட நிலையில் தற்போது வரை அது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கபடவில்லை. இருப்பினும், நீட் தேர்வினால் ஏற்படும் மரணங்கள் என்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நீட் தேர்வு தோல்வியினால் மீண்டும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையை அடுத்த குறிஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். புகைப்பட கலைஞராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஜகதீசன் (19). இவர் பல்லாவரத்தில் உள்ள பிரபல சி.பி.எஸ்.சி பள்ளியில் மருத்துவர் கனவுடன் 12 ம் வகுப்பு ஏ கிரேடு 85 சதவிகிதம் மதிப்பெண் பெற்றார். பின்பு மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து 2 முறையும் நீட் தேர்வினை சந்தித்த அவருக்கு தோல்வியே கிடைத்துள்ளது.

ஜகதீசன் -சேகர்

இதனால் வேதனை அடைந்த மாணவனை 3வது முறை தேர்வை எதிர்க்கொள்வதற்காக அண்ணாநகரில் அமைந்துள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்த்தார். இந்தநிலையில், நேற்று தந்தை செல்வ சேகர் தொழில் நிமித்தமாக வெளியே சென்றபோது ஜெகதீஸ்வரன் மட்டும் வீட்டுல் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், விரக்தியில் இருந்த மாணவர் ஜெகதீஸ்வர தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். தூக்கில் தொங்கிய இருந்த மாணவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டுப் பணிபெண் தந்தை செல்வசேகருக்கு தகவலை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

பின்னர், இரண்டுமுறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், தன்னுடைய மகன் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் செல்வசேகர் புகார் அளித்தார்.

பிரேதத்தை கைப்பற்றிய சிட்லபாக்கம் காவல்துறையினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் பிரேத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், ஜெகதீஸ்வரன் செல்போனை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். இது குறித்து ஜெகதீஸ்வரன் தந்தை செல்வசேகர் மிகுந்த மன வேதனையில் “டாக்டர் கனவுடன் இருந்த மகனை தனி ஒருவராக பார்த்து பார்த்து வளர்த்த நிலையில் இருமுறை நீட் தேர்வு தோல்வி வேதனை என கண்ணீர் மல்க தெரிவித்தார் ”.

அதுபோல் சக மாணவன் பயாசுதீன் அளித்த பேட்டியில் “நானும் ஜெகதீஸ்வரனுடன் படித்தேன். என்னை விட ஜெகதீஸ்வரன் நல்லா படிக்க கூடியவன் நான் நீட் தேர்வில் ஜஸ்ட் பாஸ் செய்ததால் தனியார் கல்லூரியில் 25 லட்சம் கட்டியதால் மருத்துவர் படிக்க வாய்ப்பு வந்தது. இதனை ஜெகதீஸ்வரனிடம் கூறியபோது உனக்கு கிடைத்த வாய்ப்பு மிக பெரியது. மக்களுக்கு சேவை செய் என வாழ்த்து கூறியவன் இன்று இல்லை. நான் கேட்கிறேன் பணம் கட்டி நீட் கோச்சிங் படிக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் எப்படி மக்கள் சேவை செய்வார்கள். நல்லா படிச்ச என் சக நண்பர் கனவு வீணாகிவிட்டதே. மருத்துவ கல்விக்கு நீட் வேண்டாம்” என உருக்கத்துடன் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை அந்த மாணவனின் தந்தை செல்வசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது உடலை அப்பகுதி போலீசார் கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தனி ஆளாக தனது பிள்ளையை வளர்த்து, அவரை மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க துடித்த அவரது தந்தையின் மறைவும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.