தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பட்டியலின மாணவனை கையால் மலம் அள்ள வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடாராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அறிவரசன். பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 15 ஆம் தேதி மாலை அறிவரசன் இயற்கை உபாதையை கழிக்க, அருகே இருந்த விவசாய நிலத்தில் உள்ள முட்புதருக்குள் சென்றுள்ளார்.
அதைப் பார்த்த வேறு சமூகத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அந்த மாணவனின் சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாகத் திட்டி கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. மேலும், மலத்தை கையால் வாரிக்கொண்டு போய் வேறு இடத்தில் வீசு என்று தொடர்ந்து அந்த மாணவனை மூங்கில் கம்பால் அடித்து துன்புறுத்தி உள்ளார். மாணவன் அடி பொறுக்காமல் இரண்டு கையால் மலத்தை அள்ளி எடுத்து, அருகில் உள்ள ஏரியில் வீசி உள்ளார்.
(சிறுவனின் தந்தை)
இதை அறிந்த பெற்றோர்கள், பென்னாகரம் காவல் நிலையத்தில் ராஜசேகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெற்றோர் வலியுறுத்தியதால் காவல்துறையினர் ராஜசேகர் மீது எஸ்,சி., எஸ்டிக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் புகாரில் கொடுத்தப்படி வழக்கு பதியப்படவில்லை என சிறுவனின் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்மந்தப்பட்ட ராஜசேகரும் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், சிறுவன் தரப்பினர் மீதும், காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.