குற்றம்

'என்ன குண்டாசுல கைது செஞ்சு கையை ஒடச்சி ஜெயில்ல தள்ளுங்க' - மதுபோதையில் இளைஞர் அட்டகாசம்!

JustinDurai

தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க கோரி மதுபோதையில் அட்டகாசம் செய்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பொன்னியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த பெருமாள் என்ற 19 வயது இளைஞர் மது போதையில் தள்ளாடியபடி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்த காவலர்களிடம் தான் உடனடியாக ஜெயிலுக்கு செல்ல வேண்டும்; அதனால் என்னை  குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமெனவும் வேண்டுமானால் தனது கை கால்களை உடைத்து சிறையில் அடையுங்கள் இல்லையென்றால், தான் நேராக வேலூர் மத்திய சிறைக்கு சென்று சரண் அடைவதாகவும் கூறி காவலர்களிடம் அட்டகாசத்தில் ஈடுபட்டார்.

பொறுமையிழந்த காவலர்கள் பெருமாளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து பெருமாளை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி அவர்களுடன் அனுப்பி வைத்தனர். மதுபோதையில் காவல் நிலையத்திற்கே வந்து காவலர்களிடம் தன்னை கைது செய்யுமாறு அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞரால் சுமார் அரைமணிநேரம் நகர காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்கலாம்: விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு - இரண்டு காவலர்கள் கைது